இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Tuesday, September 29, 2009

இசைக்குறிகளினால் அணைத்தல்

மௌனங்களினால் அலைக்கழிக்கப்படும் உனது
இரவுப்பொழுதின் இசைக்குறிகளினை
இரவிரவாக என்னிடம் நீ பாடிக்காண்பித்தாய்.

மனதின் ஓட்டங்களையெல்லாம் ஒதுக்கி
உனக்காக நீயே இவற்றினையெல்லாம் எழுதியதாய்
நேற்றைய மின்னஞ்சலில் நீ குறிப்பிட்டிருந்த போதும்
நீ வாசித்த இசைக்குறிகளில்
உனது வலிகளின் சுமைதாங்கிய எகிறல்
தூர்ந்து போய்க்கிடந்தது.

உன் வீட்டின் முன்னேயிரையும்
கடலின் அபூர்வம் தரும் இசைக்குள்
உன் தேகத்தின் சூடுகளினை இறக்கிவிடும் சந்தர்ப்பங்களில்
கலைந்து கிடக்கும் உன் இசைக்குறிகளை
பொருத்திப் பொருத்தி புதிய ராகங்களை எழுதுகிறாய்.

உன் சொற்களை அணைத்துக்கொள்ளும்
அனைத்துத் தருணங்களிலும்
நீ எழுதிக்கொள்ளும் ஒழுங்கற்ற இசைக்குறிகள்
என்னில் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்ந்து படர்ந்து
உனது கடலின் ஓவியம் வரைதலாகிறது.

15.07.2009

1 comment:

Mohammed Fasri said...

நீண்ட இரவில்,
நீ கண்ட கனவு,
இன்று உன் நினைவில்
நீ இசைக்குறிகளினால் அணைக்கப்படுகிறாய்..!
நேரமும் கிடைத்தது,
வாசிப்பும் முடிந்தது,
நன்றாகவும் இருந்தது!

வாழ்த்துக்களுடன் பஸ்ரி...!

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..