இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Wednesday, December 10, 2008

குளிர் அருந்தப்பட்ட இரவின் கதை


அர்த்தங்களற்ற அனைத்து வார்த்தைகளையும்
மீளவும் நீ வாசித்தாய்.
துளிர் காய்ந்திந்த கிளைகளின் அரும்புகளை
கொஞ்சம் கொஞ்சமாய் வருடி
மீண்டும் புது அர்த்தங்களை அவை செதுக்கி விளையாடின.

மையளின்றி என்னில் ஊர்ந்து திரியும்
உன் நினைவுகளின் ஒவ்வொரு சுவடும்
என்னிலுன்னை இறுகவே வைத்திருக்குமாறு
காலம் பல தாண்டி ஆணையிட்டது. 

தூரத்தே நின்ற அனைத்து நிம்மதிகளும்
ஒரு எட்டுக்குள் வருமினியென
உன் தொடுகைகளின் அரசியல் சொல்லிட்டு.
மிக அற்புதமாய் ஒவ்வொரு சொல்லாய்
என் காதின் பின்னிருந்து நீ மொழிந்த போது
சொற்களின் ஓவியம் மெல்லிய நிறங்களினால் வரையப்பெற்றது. 

உடைந்த ஒளிகள் மறைந்து கொண்ட இரவுகளின்
விடியும் அனைத்துப் பொழுதுகளையும்
இருவரும் இணைந்து சொந்தமாக்கிக் கொண்டோம் என
நீ கூறிய போதெல்லாம்
என் சுவர்க்கடிகாரம் தன் விழிகளின் வலியுணரும்.

ஒவ்வொன்றாய் மாறிமாறி நெஞ்சங்களில் ஊர்ந்துவிட்டு
கொஞ்சம் ஓய்வெடுத்து மீளவும் பேசிக்கொண்டிருந்த போது
பொழுதுகள் மெதுமெதுவாக மறைந்து
வேகமாய்ப் புலர்ந்தன மற்றைய நாள்.  

கனவுகளைக் கோர்க்க முடியாமலே
இரவுகள் அனைத்தும் பகல்களாகிப் போகின்றன.
கூசாமல் எழும்பும் உன் தேம்பல்களில் நாட்களினை முடிச்சிட்டு
சந்திப்புக்களற்ற பொழுதுகளை வரமாக்கிக் கொண்டோம்.

போர்வை களற்றிய உடலோடு
இரவுகளின் அனைத்துக் குளிர்மையையும் உன் ஜன்னலோரமாய்
வெகு இலகுவாக நீ அருந்தப் பழகிக்கொண்டாய்.  

இனியென்ன,
நீ காட்டித்தந்த வாழ்வின் அனைத்து ரிதங்களையும்
ஒரு மலையின் கணதியுடன்
இயல்பாகவே சுமக்கப் பழகிக் கொண்டேன்.
குவிந்துள்ள நம்மனைத்து உறவு
வானமெங்கும் தமது பங்கினை பெற்றுக் கொள்ளும்.

10.12.2008

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..