இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Wednesday, November 11, 2009

நிறங்களால் ஆதல்


கனவுகளின் எல்லையற்ற மொழியில்
என்னை அழைத்துக் கொள்ள வந்தாய்.

பிரித்துணர முடியாத நிறக்கலவைகளுக்குள்
பிரகாசமாய்ப் பத்திரப்படுத்திய உன்
புன்னகையுடனான நீ
இன்னும் கலைந்து விடாதபடியே
என் கண்கள் திறந்திருக்கின்றன.

பின்வரும் நாட்களில்
என்னையுரசி மொய்த்துக்கிடக்கும் நீதான்
எல்லையற்ற மொழியால்
கனவில் அழைத்தாயென
நீயற்ற ஒருவளிடம் எப்படிச் சொல்வேன்?

என் சொந்தக் கனவுகளில்
நீ குறுக்கிட்டதற்கான தண்டனையாய்
கனவுகளின் நிறத்திலிருந்து பிரித்து
உன்னையிங்கு இருக்கச் செய்துவிடலாம்.

06.10.2009

2005 - 2009



உப தலைப்பு : 2005 - 2007

மீளமுடியாத நினைவுகள் என கூறிக் கொண்டு
முகம் முழுவதும் படர்ந்திருந்த
கண்ணீரின் தடித்த கோடுகளை
உன் கைகளாலே கலைத்து விட்டு
எழும்பிச் செல்கிறாய்.

''உடல் மொழிதல்களும் குறியீடுகளும்
அற்றிருந்த ஒரு வாழ்வாய்
உன்னுடனான பொழுதுகள்'' என்றேன்.

''இவ்வளவையும் எப்படி அடக்கிவைத்தாய்''யென
என்னை சுவாசித்துக் கொண்டே
உன் துல்லியமான கண்களை
என்னருகில் வைத்துக் கேட்கிறாய்.

மிக லாவகமாய்,உடலைத் துறந்து
சதைக்குவியல்களின் கூட்டிலிருந்து
எனக்கேயான அழகியலில் வெளியேறி
எல்லைகளெல்லாம் அழித்தொழித்து
உன் சுவாசிப்பிற்காய் நான்
வாழ்ந்து கொண்டிருக்கிறது.

உப தலைப்பு: 2007 -2009
வாழ்தலின் நாட்கள் ஓங்கியறையப்படுகின்றன.

ஒருவருக்காய் இருவரும்
இருவருக்கேயான ஒருவரினதும் சுவாசங்கள்
பச்சை பச்சையாய் பிய்க்கப்படுகின்றன.

என்னை சுவாசிப்பதால் நீ
வாழமுடியாது என்று கூறப்பட்டு
சுவாசங்கள் நிறுத்தப்படுகின்றன.

நீண்ட மௌனங்களுடனான கலவி.

பின்னெழும் அசதியில்
அமைதியாய் நாட்கள் ஊர்கின்றன நெடுந்தூரம்.

உபதலைப்பு : 2009
''சகல காரியங்களுக்கும்
பிறப்பு ஒரு முறைதான்மா''யென
உன் திருமதியடையாளங்களுடன்
sms வருகிறது.

20.09.2009

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..