
உப தலைப்பு : 2005 - 2007
மீளமுடியாத நினைவுகள் என கூறிக் கொண்டு
முகம் முழுவதும் படர்ந்திருந்த
கண்ணீரின் தடித்த கோடுகளை
உன் கைகளாலே கலைத்து விட்டு
எழும்பிச் செல்கிறாய்.
''உடல் மொழிதல்களும் குறியீடுகளும்
அற்றிருந்த ஒரு வாழ்வாய்
உன்னுடனான பொழுதுகள்'' என்றேன்.
''இவ்வளவையும் எப்படி அடக்கிவைத்தாய்''யென
என்னை சுவாசித்துக் கொண்டே
உன் துல்லியமான கண்களை
என்னருகில் வைத்துக் கேட்கிறாய்.
மிக லாவகமாய்,உடலைத் துறந்து
சதைக்குவியல்களின் கூட்டிலிருந்து
எனக்கேயான அழகியலில் வெளியேறி
எல்லைகளெல்லாம் அழித்தொழித்து
உன் சுவாசிப்பிற்காய் நான்
வாழ்ந்து கொண்டிருக்கிறது.
உப தலைப்பு: 2007 -2009
வாழ்தலின் நாட்கள் ஓங்கியறையப்படுகின்றன.
ஒருவருக்காய் இருவரும்
இருவருக்கேயான ஒருவரினதும் சுவாசங்கள்
பச்சை பச்சையாய் பிய்க்கப்படுகின்றன.
என்னை சுவாசிப்பதால் நீ
வாழமுடியாது என்று கூறப்பட்டு
சுவாசங்கள் நிறுத்தப்படுகின்றன.
நீண்ட மௌனங்களுடனான கலவி.
பின்னெழும் அசதியில்
அமைதியாய் நாட்கள் ஊர்கின்றன நெடுந்தூரம்.
உபதலைப்பு : 2009
''சகல காரியங்களுக்கும்
பிறப்பு ஒரு முறைதான்மா''யென
உன் திருமதியடையாளங்களுடன்
sms வருகிறது.
20.09.2009
No comments:
Post a Comment