இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Tuesday, September 29, 2009

ஆழத்திலிருந்து உன்னைப் பிரித்தல்



எனது மெய்ப்பிக்கப்படாத அனைத்துலக
கனவுப் பொழுதுகளையும்
நீயே இன்னமும் அபகரிக்கிறாய்.

அனைத்திலும் நானாகி
அதிசயிக்கத்தக்க வழிகளிலெல்லாம் என்னை
உன் மெய்ப் பொருளாய் பாறென்ற உன்
கட்டளைகளிற்கு என்னதாயிற்று என்றேன்.
கனவுகளின் மீதேறி
உனக்கான பெரும் இடத்தினை பறித்து
என்னையே என்னுடன் இணைக்கும் பயணத்தில்
நான் தோற்று நின்றேன்.

உன்னுடனான நாட்களில் எழுந்த கவிதைகளும் எழுத்தும் இசையும்
இன்றென் வலிகளின் நீட்சிப் பிழம்பாய்க் கிடக்கிறது.

சிதைந்த ஐன்னலின் வழியாய்
என் அனைத்துலகப் பொழுதுகளின் ஆரம்பமும் முடிவும்
சில நினைவுகளைத் தள்ளிவிட்டு
முன்னகரும் முயற்சிகள் இடையிடையே பறிபோயின.
வலிகளில் பிய்த்து எடுக்கப்பட்ட என்னிடத்தில்
எதிலும் பிடிப்பற்ற வெறும் காற்றும்
அமரத் தகுதியில்லை என்று துப்பியது.

கடந்து செல்லும் நாட்களின் முன்தைய பொழுதுகளிலிருந்து
ஒவ்வொரு இரவுகளிலும் பகலிலும் முழுதாய்
உன்னையும் உன்னோடிருந்த என்னையும் விட்டகன்று
காற்று குடிகொள்ளும் அங்கமெல்லாம்
என்னைத் தனியாய்ப் பரப்பிக் கொள்கிறேன்.

இனியாவது என் அனைத்துலகக் கனவுகள் மெய்ப்பிக்கப்பட
எனக்குள்ளிருக்கும் உன்னையும் என்னையும்
''கலைத்து முடிந்து விட்டது'' என்றது மனம்.

30.05.2009

No comments:

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..