
எனது மெய்ப்பிக்கப்படாத அனைத்துலக
கனவுப் பொழுதுகளையும்
நீயே இன்னமும் அபகரிக்கிறாய்.
அனைத்திலும் நானாகி
அதிசயிக்கத்தக்க வழிகளிலெல்லாம் என்னை
உன் மெய்ப் பொருளாய் பாறென்ற உன்
கட்டளைகளிற்கு என்னதாயிற்று என்றேன்.
கனவுகளின் மீதேறி
உனக்கான பெரும் இடத்தினை பறித்து
என்னையே என்னுடன் இணைக்கும் பயணத்தில்
நான் தோற்று நின்றேன்.
உன்னுடனான நாட்களில் எழுந்த கவிதைகளும் எழுத்தும் இசையும்
இன்றென் வலிகளின் நீட்சிப் பிழம்பாய்க் கிடக்கிறது.
சிதைந்த ஐன்னலின் வழியாய்
என் அனைத்துலகப் பொழுதுகளின் ஆரம்பமும் முடிவும்
சில நினைவுகளைத் தள்ளிவிட்டு
முன்னகரும் முயற்சிகள் இடையிடையே பறிபோயின.
வலிகளில் பிய்த்து எடுக்கப்பட்ட என்னிடத்தில்
எதிலும் பிடிப்பற்ற வெறும் காற்றும்
அமரத் தகுதியில்லை என்று துப்பியது.
கடந்து செல்லும் நாட்களின் முன்தைய பொழுதுகளிலிருந்து
ஒவ்வொரு இரவுகளிலும் பகலிலும் முழுதாய்
உன்னையும் உன்னோடிருந்த என்னையும் விட்டகன்று
காற்று குடிகொள்ளும் அங்கமெல்லாம்
என்னைத் தனியாய்ப் பரப்பிக் கொள்கிறேன்.
இனியாவது என் அனைத்துலகக் கனவுகள் மெய்ப்பிக்கப்பட
எனக்குள்ளிருக்கும் உன்னையும் என்னையும்
''கலைத்து முடிந்து விட்டது'' என்றது மனம்.
30.05.2009
No comments:
Post a Comment