இத்தளம் பற்றி..

இது எனது கவிதைகளுக்கான வலைத்தளம் , இங்கு உங்களின் வருகையினை மதிக்கிறேன். இருண்டு கிடக்கும் இங்குள்ள சூழலிற்குள் உரையாடுவது ஜனாஸாக்களின்/ சடலங்களின் மீதுதான் சாத்தியப்படும் ஒன்றாய் மாறிவிட்டது. சிறு பான்மையினங்களின் மீதான பேரினவாதத்தின் ஆக்கரமிப்புக்கள், சக சிறுபான்மையினை வேரறுக்க துடிக்கும் இன்னொரு சிறு பான்மையின் அதிகாரத் தளத்தின் மீதான எதிர் கதையாடல்கள், முஸ்லிம் தேசத்தின் தளங்கள் எனது பிரதிகளில் நுழைந்து கொள்வதினை தவிர்க்க முடியாததாகி விட்டது. இலக்கியம் நமது வாழ்வின் அனைத்திலும் நுழைந்து விட்டதன் பின், அதிலும் கொலைகளின் தேசத்தில் பூக்களை எப்படிப் பாடுவது. நமக்கு அகப்படும் விடயங்கள் தொடர்பாக முடியுமட்டும் உரையாடுவோம். அது வன்முறையின்றி மூக்கு வரை வந்து போகட்டும். மனம் திறந்து அவரவர் தனித்துவம் போல....

Tuesday, September 29, 2009

மர்ம விளையாட்டின் அலைச்சல்

அலட்சியமாய்
எதிலும் நிலையற்றுக் கிடக்கிறது மனம்.

புது மேலதீக சுமையாய்
எனதுடலே எனக்குப் பாரமாயிற்று.

வானம் பூமியெங்கும் வியாபித்திருந்த நான்
மிகப் பயங்கரமாய்
குறுந்தளத்தில் சுவாசத்திற்கென
ஓங்கியறையப்பட்ட பொழுதுகளின் பின்
எனதுடலே எனக்குப் பாரமாயிற்று.

மௌனமாய் நகர்ந்து போகும் இரவுகளில்
கொந்தளித்து தட்டுத்தடுமாறி
கடற்கரையோரமும் கோணாவத்தை அருகிலும்
வயலின் குளிர் காற்றிலும்
வெளிறிப்போய் அழகிழந்து கிடக்கிறது எனதுயிரும் உடலும்.

ஆழமாய் நான் போட்ட அனைத்துக் கோலங்களும்
இன்று அர்த்தமற்றுப் போயின.
எதிலும் நிலையற்றும் நிலைக்கமுடியாமலும்
அலைக்கழிந்து கிடக்கிறது என் மனம்.

என் பற்றிய இறைவனின் ரகசியம்
இன்னமும் தெளிவற்றுக் குழம்பியதாகவே இருக்கிறது.
எனதுடலே எனக்குப் பாரமாயிற்று.

20.05.2009

1 comment:

Anonymous said...

Nice and painful

எனது வலைத்தளமும் நானும்

My photo
இந்த வலைத்தளங்களினூடாய் பொதுப்பார்வைக்கு எனது செயற்பாடுகளையும் இணைத்துக் கொள்கிறேன். அதி வேகமான வாழ்கைக்குள்ளும் எனது உலகினுள் வருகை தந்தமைக்கு ஜஸாகல்லாஹ் என்பதுடன் வரவேற்கிறேன். தொடர்ந்து உரையாடுவோம்..