
புவியீர்ப்பு விசையின் எல்லைகளிற்கு அப்பால்
என்னிடமிருந்து மறைந்து போன
காற்றின் கூறுகளினை அடைத்துக் கொண்டிருந்தேன்.
வானவெளியின் பெரு நதி
மூங்கில் மலையோரமாய் சலங்கை கட்டி
மௌனமாய் ஓடிக்கொண்டிருக்கும் வாசனை கிட்டியது.
அந்தப் பரந்த வெளியெங்கும்
குருதி மணமும் இறுதி சுவாசமும்
புதிய சூரிய ஒளிக்கற்றைகளோடு பரவி
காற்றின் மூலக்கூற்றின் வெளியெங்கும்
வன்முறையின் செய்திகளினைச் சொல்லியது.
வராமலே போய்க் கொண்டிருந்த
எனக்குரிய காலச் சந்தர்ப்பத்தின் இடுக்கினுள்
இன்னும் மறந்திட முடியாத வலியின் தொடராய்
மற்றொன்றான காலையில்
தம்பிப் போடியாரும் அவர் தோழர் மூவரும்
குருதி மணமும் இறுதி சுவாசமுமாய் இனி வர முடியாததுவாய்
என்னைக் கடந்து போயினர்.
தடுத்திட முடியாத வேகமாய் அவர்கள் பரவ
புவியிலிருந்து வன்மமாய் அவர்கள் பிரிக்கப்பட்ட
கொக்குலுவ - பொத்தானை நோக்கி நான் வந்திறங்கினேன்.
நான்கு மோட்டார் சைக்கிள்களில்
எட்டுப் பேர் மறைந்தவுடன் திரும்பிய என் பார்வையில்
சுவாசமிழந்த நான்கு உடல்கள் தட்டுப்பட்டு இடறி நின்றன.
பின்னொரு நாளின் நினைவாயும்
கத்தத்திற்கான ஒரு நாட்குறிப்பாகவும்
கடந்து சென்றது அற்பமாய் இச்செய்தியும் வலியும்.
உசாத்துனைக் குறிப்புக்கள்:
தம்பிப் போடியார் - அக்கரைப்பற்றுப் பிரதேச பிரிவில் முதலாம் குறிச்சியில் வசித்தவர். ஐந்து ஆண்கள் ஒரு பெண்னின் தகப்பன். ஒரு விவசாயியாகவே வாழ்ந்து விவசாயியாகவே 16.10.2008ல் படுகொலை செய்யப்பட்டவர்.
அவர் தோழர்கள் மூவர் - தம்பிப் போடியாருடன் விவசாயத்திற்காய் அதிகாலையில் அவர்களிற்கு சொந்தமான வயல்வெளிகளிற்கு சென்ற போது தமிழ் தீவிரவாத குழுவினால், குழுக்களினால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.
கொக்குலுவ - பொத்தானை முஸ்லிம்கள் பரமபரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் வயல் வெளிகளில் ஒரு பிரதேசம்.
நன்றி: பெருவெளி 06
No comments:
Post a Comment